நீட் தேர்வின் முடிவுகளை வெளியிட தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்றம்.! சிசிடிவி காட்சியை சமர்ப்பிக்க ஆணை..,
நீட் தேர்வின் முடிவுகளை வெளியிட தடை விதிக்க மறுத்து, தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சென்னை : நாடு முழுவதும் கடந்த மே 4 ஆம் தேதி, நீட் தேர்வு நடத்தப்பட்டது. அன்றைய தினம், சென்னை அருகே அவடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா CRPF மையத்தில் 464 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு நடந்தபோது, மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற்ற இந்தத் தேர்வில், மாலை 3 மணி முதல் 4:15 மணி வரை மின்சாரம் தடைபட்டது.
கனமழை மற்றும் புயல் காரணமாக இது நிகழ்ந்தது, இதனால் மாணவர்கள் குறைந்த வெளிச்சத்தில் தேர்வு எழுத வேண்டியிருந்தது. மேலும், மழைநீர் தேர்வு அரங்கிற்குள் புகுந்ததால், மாணவர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். ஆனால், கூடுதல் நேரம் வழங்கப்படவில்லை என்று மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட 13 மாணவர்கள், இந்த இடையூறுகள் தங்கள் செயல்திறனைப் பாதித்ததாகவும், நியாயமான வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், அந்த மனுக்களில், கடந்த மே 4 ம் தேதி நடந்த தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மே 16ம் தேதி அன்று தேசிய தேர்வு முகமை (NTA) தேர்வு முடிவுகளை வெளியிட தற்காலிகத் தடை விதித்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ” விசாரணை நடத்தியதில், நீட் தேர்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிய வந்ததாகவும், மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதால் மறு தேர்வு நடத்த முடியாது என தேசிய தேர்வு முகமை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
நீதிபதி சி.குமரப்பன் வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எம் ஜோதிராமன் அமர்வு முன்பு மாணவர்கள் மேல்முறையீடு செய்தனர். இதில், தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட முடியாது என மறுப்பு தெரிவித்ததோடு, அதே வேளையில் தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளை வரும் திங்கட்கிழமை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.