வன்னியர்களுக்கான 10.5 % உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது, இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு.
தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்காக 1983ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பின்படி, 10.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில், இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டது அரசியல் மற்றும் தேர்தல் நோக்கத்துடன் அறிவிக்கப்பட்டது என்றும் இதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஓபிசி பிரிவில் இருக்கக்கூடியவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
இந்த ஒதுக்கீட்டால் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருக்கும் மற்ற பிரிவுகளை சேர்ந்தவர்களின் உரிமைகள் பாதிக்கப்படுகிறது. இதனால் 10.5% இடஒதுக்கட்டை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில், இட ஒதுக்கீடு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வன்னியருக்கான 10.5 % உள் இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை, பணி நியமனம் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் இடஒதுக்கீடு அடிப்படையிலான பணி நியமனம், மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், வழக்கின் இறுதி விசாரணைக்கு தயாராக இருப்பதால், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 10.5 % உள் இடஒதுக்கீட்டின் கீழ் நியமனங்கள் மேற்கொள்ள தடை விதிக்காமல் வழக்கு செப்டம்பர் 14ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.