திருச்சி :மாவட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பெயரிலான நூலகத்தை திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான நிர்வாக அனுமதியை முதல்வர் வழங்கியதற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் எக்ஸ் வலைத்தள பக்கதில் நன்றியும் தெரிவித்து இந்த திட்டத்திற்கான அரசு ஆணையையும் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது “நூலகம் அமைவதை செயல்படுத்தும் விதமாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரிலான நூலகத்தை ரூ.290 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான நிர்வாக அனுமதியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசாணையின் மூலம் வழங்கியுள்ளார். திருச்சி மாவட்ட மக்களின் சார்பாகவும், டெல்டா மாவட்ட இளைஞர்கள், வாசகர்கள், எழுத்தாளர்களின் சார்பாகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என அமைச்சர் அன்பில் மகேஸ் எக்ஸ் நன்றியை தெரிவித்துள்ளார்.
வெளியிடப்பட்டுள்ள அரசு ஆணையில் “திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டம். செங்குளம் கிராமம், பிளாக்-12, நகரளவை எண்.4 மற்றும் திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டம், கோ.அபிஷேகபுரம் கிராமம் நகரளவை எண்.60 & 61 என்ற 1.85.17 ஹெக்டேர் இடத்தில் 18333 சதுர மீட்டர் (1,97,337 சதுரடி) (G+7) அளவில் ரூ.235.00 கோடி திட்ட மதிப்பீட்டில் (ரூபாய் இருநூற்று முப்பத்து ஐந்து கோடி மட்டும்) நூலகக் கட்டடம் கட்டுவதற்கு பொதுப் பணித்துறையிடமிருந்து விரிவான திட்ட மதிப்பீடு மற்றும் வரைபடம் பெறப்பட்டுள்ளது .
இந்நூலகத்திற்குத் தேவையான நூல்கள் மற்றும் மின்நூல்கள் ரூ.50.00 கோடி மதிப்பிலும் (ரூபாய் ஐம்பது கோடி மட்டும்) மற்றும் தொழில்நுட்ப சாதனங்கள் ரூ.5.00 கோடி மதிப்பிலும் (ரூபாய் ஐந்து கோடி மட்டும் ) ஆகமொத்தம் ரூ.290.00 கோடி மதிப்பில் (ரூபாய் இருநூற்று தொண்ணூறு கோடி மட்டும்) திருச்சிராப்பள்ளியில் மாபெரும் நூலகம் அமைப்பதற்கு தமிழ்நாடு நிதிக் குறியீடு (T.N.F.C Art.99) விதி.99-ன்படி முன்பணம் பெற்று செலவினம் மேற்கொள்ள நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வழங்குமாறு பொது நூலக இயக்குநர் கோரியுள்ளார். ரூ.290,00,00,000/- (ரூபாய் இருநூற்று தொண்ணூறு கோடி மட்டும்) திட்ட மதிப்பீட்டில் மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கலாம் என முடிவு செய்து, நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்தும் அரசு ஆணையிடுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
unknown node