கவின் கொலை வழக்கு : கைதான சுர்ஜித் தந்தை சரவணனுக்கு ஆக 8 வரை நீதிமன்றக் காவல் !

கவின் கொலை வழக்கில் கைதான பெண்ணின் தந்தை எஸ் ஐ சரவணனுக்கு ஆக 8 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

kavin death case update

திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் சரவணனுக்கு ஆகஸ்ட் 8, 2025 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. கவினின் கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட சரவணன், மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் சத்யா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிபதி சத்யா, சரவணனை ஆகஸ்ட் 8 வரை காவலில் வைக்க உத்தரவிட்டார், இதையடுத்து அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கவின் கொலை வழக்கு, சரவணனின் மகன் சுர்ஜித் (21) மற்றும் மனைவி கிருஷ்ணவேணி ஆகியோருடன் தொடர்புடையது. சுர்ஜித், கவினை மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், தனது சகோதரியுடன் பேசியதற்காக ஆத்திரத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

சுர்ஜித் மீது பாரதிய நீதி சட்டக் கோவை (BNS) மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் கொலை உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணவேணி, காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டு தற்போது விசாரணையில் உள்ளார்.

வழக்கு தொடர்பாக, கவினின் தாயார் தமிழ்செல்வி அளித்த புகாரில், “சரவணனும் கிருஷ்ணவேணியும் கவினை மிரட்டியதுடன், கொலையைத் தூண்டினர்,” என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. கவினின் உறவினர்கள், சரவணனின் கைதை வரவேற்றாலும், கிருஷ்ணவேணியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.

காவல்துறை, 24 மணி நேரத்தில் கிருஷ்ணவேணியை கைது செய்ய உறுதியளித்ததை அடுத்து, மறியல் வாபஸ் பெறப்பட்டது. மேலும் கவினின் உடல், பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, இறுதிச் சடங்குகளுக்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹடிமணி, “வழக்கு விரைவாக விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி செய்யப்படும்,” என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்