ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்கிறான்., ஸ்டாலின் சொல்றாரு பழனிசாமி செய்றாரு – முக ஸ்டாலின்

DMK leader Mk Stalin has said in his election campaign that corruption has taken place in the AIADMK government in all sectors.

அனைத்து துறைகளிலும் அதிமுக அரசில் ஊழல் நடைபெற்றதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார்.

விருத்தாச்சலம் பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்ட முக ஸ்டாலின் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பேசிய அவர், மாதம் ரூ.5,000 கொடுங்க என்று நான் சொன்னேன், காதுல கேட்காதது போல் முதல்வர் பழனிசாமி இருந்தார். ஆனால் கோடிக்கணக்கான பணத்தை கான்ட்ராக்ட் நபர்களுக்கு கொட்டி கொடுத்துள்ளார். கொரோனா காலத்திலும் டெண்டர் முறையில் செய்தார்கள். அப்போது, வழங்கப்பட்ட மருந்து பொருட்களில் கூட ஊழல் செய்தார்கள் என குற்றசாட்டியுள்ளார்.

மருந்தில் தொடங்கி ப்ளீச்சிங் பவுடர் வரை கொள்ளை, நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு கொடுத்ததிலும் ஊழல், அந்த பணத்தை கூட முழுமையாக விநியோகம் செய்யவில்லை என கூறியுள்ளார். தற்போது ஹோட்டல் உரிமையாளர்கள் எல்லாம் புகார் அளிக்கின்றனர். கொரோனாவைவிட கொடூரமான கொள்ளை அரசாகத்தான் அதிமுக அரசு செயல்பட்டது. இந்த கொள்ளை கூட்டத்தின் ஆட்டத்தை முடித்து ஆகவேண்டும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கிற கடமை மக்களுக்கு தான் இருக்கிறது.

அதன்பிறகு அமைய கூடிய திமுக ஆட்சி மக்களின் கவலைகளை தீர்க்கின்ற ஆட்சியாக அமையும் என்று கூறி, நான் சொன்னதை தான் முதல்வர் பழனிசாமி செய்து வருகிறார் என்று பல்வேறு திட்டங்களை ஸ்டாலின் பட்டியலிட்டார். பின்னர் பேசிய ஸ்டாலின், ஒரு படத்தில் ரஜினிகாந்த் சொல்லுவார் ஆண்டவன் சொல்றான் இந்த அருணாச்சலம் செய்கிறான் என்பதுபோல், இந்த ஸ்டாலின் சொல்றாரு முதல்வர் பழனிசாமி செய்றாரு என்று பன்ச் டயலாக்குடன் கூறியுள்ளார். இதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கு என்றும் விமர்சித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து பேசிய முக ஸ்டாலின், சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்று கலைஞர் அவர்கள் சொன்னார். அதேபோல் இந்த ஸ்டாலினும் சொன்னதைத்தான் செய்வான், செய்வதைத்தான் சொல்வான் என்று கூறி நம்பிக்கையுடன் செல்லுங்கள் என்று மக்களிடம் தெரிவித்துள்ளார். நாளைய தமிழகம் நல்ல தமிழகமாக அமையும் என்றும் முக ஸ்டாலின் மக்கள் முன்னிலையில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.