‘வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இல்லை’ – அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு .!
வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

சென்னை : மின் கட்டணத்தை 3% உயர்த்த மின் வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது என தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, தமிழக அரசு வரும் ஜூலை மாதம் முதல் 3% வரை மின் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக ராமதாஸ், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர்.
ஏற்கெனவே, 2024 ஜூலையில் 4.8%, 2023 ஜூலையில் 2.18% கட்டணம் உயர்ந்த நிலையில் தற்போது ஜூலை மாதம் மீண்டும் உயர்த்த முடிவு என தகவல் பரவியது. மேலும், ஆணையத்தின் பரிந்துரை தொடர்பாக முதல்வரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், அதற்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது குறித்து பின்வருமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை.
எனினும் ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணம் தொடர்பான ஆணை வழங்கிடும்போது. அதனை நடைமுறைப்படுத்துகையில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது எனவும். தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரவேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார் என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.