“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!
என்னால் தொடங்கப்பட்ட இந்த கட்சிக்கு என் மூச்சு இருக்கும்வரை நான் தான் தலைவர் என்று ராமதாஸ் மீண்டும் மீண்டும் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராமதாஸ், ”தாம் உயிருடன் இருக்கும் வரை, பாமகவுக்கு தாம்தான் தலைவர் என்று கூறினார். திமுக தலைவராக கருணாநிதி பதவி வகித்தது போல, தாமும் பாமக தலைவராக இருப்பேன்” என்றும் ராமதாஸ் உறுதியாக தெரிவித்துள்ளார்.
அன்புமணி குறித்த கேள்விக்கு, ”அவர் தான் சொல்வது போல கேட்டாக வேண்டும். அன்புமணி செயல் தலைவராக மட்டுமே கட்சியில் நீடிப்பார். மு.க.ஸ்டாலின் இருந்தது போல, அன்புமணியும், கட்சிக்கு செயல் தலைவராக இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம்என ராமதாஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
நண்பர் கலைஞர் பாணி
என் நண்பர் கலைஞர் கட்சித் தலைவராகவும், ஆட்சித் தலைவராகவும் இருந்ததை கண்டு மு.க.ஸ்டாலின் முனுமுனுத்தது கிடையாது. அது தான் தந்தை – மகன் மீதான அன்புக்கு உதாரணம். தந்தை மீது மகனும், மகன் மீது தந்தையும் வைத்திருக்கும் ஆத்மார்த்தமான மரியாதைக்கான உதாரணம்.
அன்புமணி இதை செய்தால் சிக்கல் தீரும்
அன்புமணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு இதுவரை முடிவுக்கு வரவில்லை. ‘பிரச்னை குறித்து பேசினோம். பேசிக்கொண்டு இருக்கிறோம். பேசிக் கொண்டே…. இருக்கிறோம்’. அன்புமணியை யாரும் பின்னால் இருந்து இயக்க முடியாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமகவில் பொறுப்பாளர்களை நியமிக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. நான் நியமித்தவர்கள் அனைவரும் நிரந்தர பொறுப்பாளர்கள் என ராமதாஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், எல்லாவற்றுக்கும் முடிவு உண்டு, ஆனால் இதில் முடிவு இன்னும் வரவில்லை. செயல் தலைவர் பதவியை அவர் ஏற்றுக் கொண்டால், தற்போது உள்ள பிரச்னை முற்றிலும் தீர்ந்துவிடும். ஆனால், அதை அவர் ஏற்க மறுக்கிறார். அந்த அளவுக்கு மிகவும் பிடிவாதம் பிடிக்கிறார் என ராமதாஸ் கூறியுள்ளார்.
முருகன் மாநாடு
முருகன் மாநாடு குறித்து கேள்விக்கு, மதுரை முருகன் பக்தர்கள் மாநாட்டிற்கு எனக்கு அழைப்பு வரவில்லை, முருகர் மாநாட்டில் அண்ணா, பெரியார் அவமதிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், மாநாட்டில் பெரியார், அண்ணாவை அவமதித்தது வருந்தக்கூடியது.
தமிழ்நாட்டின் மக்களின் உள்ளங்களில் வாழும் தலைவர்களை கொச்சைப்படுத்தக் கூடாது. கருத்தில் முரண்பாடு இருந்தாலும் தலைவர்களை கொச்சைப்படுத்தக் கூடாது. அரசியல் தலைவர்களை அவமதிப்பது சரியில்லை, மக்களுக்காக உழைத்த தலைவர்களை அவமதிப்பதை ஏற்க முடியாது என்று பதிலளித்தார்.