சென்னை :தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக தலைவர் விஜய் குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார். விஜய் அரசியலில் அனுபவமற்றவர் என்றும், முதலில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும் அவர் கூறினார். குறிப்பாக, ஒரு நடிகையின் (திரிஷா) பெயரை குறிப்பிட்டு, “திரிஷாவிடம் இருந்து வெளியே வந்தால் தான் எல்லாமே நடக்கும்” என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற மாட்டார் என்றும், அவருக்கு களத்தில் அடிப்படை அமைப்பு இல்லை என்றும் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்தார்.இந்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பெண் ஒருவரை இழுத்து அரசியல் விமர்சனம் செய்தது தகாதது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது தேர்தல் களத்தில் பாஜகவுக்கு எதிரான எதிர்மறை பிம்பத்தை உருவாக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவை ஆளும் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர், அரசியல் கருத்துகளைச் சொல்லும்போது பொதுவெளியில் பயணிக்கும் பெண்ணைப் பற்றி அவதூறாகப் பேசுவது அழகல்ல என்று அவர் தெரிவித்தார்.
பெண்களைக் கண்ணியத்துடன் பேசுவதும், நடத்துவதுமே நாகரீக அரசியல் என்றும் அவர் வலியுறுத்தினார்.தமிழச்சி தங்கபாண்டியனின் கண்டனம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவலாக பேசப்படுகிறது. இது பெண்ணியக் கண்ணோட்டத்தில் அரசியல் விவாதங்களை மேம்படுத்த வேண்டிய தேவையை மீண்டும் நினைவூட்டுவதாகவும், அரசியல்வாதிகள் பொறுப்புடன் பேச வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்துவதாகவும் பார்க்கப்படுகிறது.
