நேபாள நிலநடுக்கம்.! பலி எண்ணிக்கை 140ஆக உயர்வு.!
நேபாள நேரப்படி நேற்று இரவு 11.47 மணியளவில் தலைநகர் காத்மண்ட் பகுதியில் இருந்து மேற்கில் 500 கி.மீ தொலைவில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில், லாமிடாண்டா பகுதியை மையமாக கொண்டு 6.4 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சுமார் 15 நிமிடங்கள் வரையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானாது, இந்தியாவின் டெல்லி, பீகார் மாநிலங்கள் வரையில் உணரப்பட்டது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், ஜாஜர்கோட் , ருகும் மாவட்டத்தில் கட்டிடங்கள், வீடுகள் சரிந்து விழுந்தன.
நேபாள நிலநடுக்கம்..128 பேர் உயிரிழப்பு..! பிரதமர் மோடி இரங்கல்..
இதில் ஜாஜர்கோட் , ருகும் மாவட்டங்களில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி முதற்கட்டமாக 69 உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க மீட்புப்படையினர் , நேபாள ராணுவத்தினர், நேபாள போலீசார் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
இதுவரை கட்டிட இடிபாடுகளில் சிக்கி 140 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2015க்கு பிறகு நேபாளத்தில் ஏற்பட்ட மிக பெரிய நிலநடுக்க பாதிப்பு இதுதான் என குறிப்பிடப்படுகிறது.
டெய்லேக், சல்யான் மற்றும் ரோல்பா ஆகிய மாவட்டங்களிலும் நிலநடுக்க பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது, பாதிப்பு ஏற்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் தற்போது மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நேபாள நாட்டின் நிலநடுக்க பாதிப்புக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் கணக்கில், “நேபாளத்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து ஆழ்ந்த வருத்தம். நேபாள மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது மற்றும் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது. எங்களுடைய எண்ணங்கள் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்.” என்று பதிவிட்டு தனது வருத்தத்தை பகிர்ந்துள்ளார்.