வாஷிங்டன் :ஈரான் புரட்சிகர காவல்படை (IRGC) தளபதி காசிம் சுலைமானி 2020-ஆம் ஆண்டு அமெரிக்க டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்ட பாகிஸ்தான் நாட்டவர் அசிப் ரசா மெர்ச்சன்ட் (Asif Raza Merchant) மீது நியூயார்க் கூட்டாட்சி நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.அசிப் ரசா மெர்ச்சன்ட் ஈரானிய தொடர்புகளுடன் இணைந்து அமெரிக்காவில் கொலைத் திட்டத்தை செயல்படுத்த முயன்றதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.
டிரம்ப், முன்னாள் அதிபர் ஜோ பைடன், முன்னாள் ஐ.நா. தூதர் நிக்கி ஹேலி ஆகிய மூவரும் கொலைப் பட்டியலில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் அமெரிக்காவிற்கு வந்ததே டிரம்பை கொலை செய்யும் நோக்கத்துடனே என்று அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.மெர்ச்சன்ட் 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் FBI-யின் ரகசிய அதிகாரிகளை (undercover agents) கொலைக்காரர்களாக நினைத்து அவர்களிடம் 5,000 டாலர் கொடுத்து கொலைத் திட்டத்தை விவரித்தார். ஹோட்டல் நேப்கின் மற்றும் சில பொருட்களைப் பயன்படுத்தி அவர் கொலைத் திட்டத்தை வரைந்து காட்டினார்.
ரேலி ஒன்றில் அரசியல் தலைவரை கொலை செய்துவிட்டு, போராட்டம் நடத்தி கொலையாளியை தப்பிக்க வைக்கும் திட்டமாக இது இருந்தது.அசிப் ரசா மெர்ச்சன்ட் 2024 ஜூலை 12-ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து வெளியேறும் போது கைது செய்யப்பட்டார். அவர் மீது transnational terrorism மற்றும் murder-for-hire ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். தண்டனை தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
விசாரணையின் போது மெர்ச்சன்ட், தனது குடும்பத்தினரை ஈரானில் IRGC அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றுவதற்காகவே இந்தத் திட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறினார். ஈரானிய தொடர்பாளர் டிரம்ப், பைடன், ஹேலி ஆகியோரை கொலை இலக்குகளாகக் குறிப்பிட்டதாகவும், ஆனால் தனக்கு குறிப்பிட்ட ஒருவரை கொல்ல உத்தரவிடப்படவில்லை என்றும் அவர் சாட்சியம் அளித்தார்.இந்த வழக்கு அமெரிக்கா – ஈரான் இடையேயான தற்போதைய போர் பதற்றத்தின் பின்னணியில் நடைபெற்றது. ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்ட பிறகு, ஈரான் பதிலடி தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது. இந்தக் கொலைத் திட்டம் ஈரானின் “playbook” என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். இது உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
