சைலண்டாக சம்பவம் செய்த அமெரிக்கா.., 25 நிமிடங்களில் துவம்சம் பி2 போர் விமானங்கள்.!
ராடார் உள்ளிட்ட எந்த கண்காணிப்பிலும் சிக்காமல் குண்டு வீசும் திறன் பெற்ற பி-2 விமானங்களை பயன்படுத்திய அமெரிக்கா.

அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் ‘மிட்நைட் ஹேமர்’ என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில், அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு தாமதமின்றி பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அந்நாட்டின் மீது கடந்த 13 ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலில், அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பகான் ஆகிய மூன்று அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.
வெறும் 25 நிமிடங்களில் தாக்குதலை முடித்து விட்டு அனைத்து அமெரிக்க ராணுவ விமானங்களும் ஈரானிய வான்வெளியை விட்டு வெளியேறியதாக தெரிய வந்துள்ளது. ராடார் உள்ளிட்ட எந்த கண்காணிப்பிலும் சிக்காமல் குண்டு வீசும் திறன் கொண்ட அதிநவீன பி-2 போர் விமானங்கள் ஈரானின் மூன்று அணு உலைகள் மீது குண்டுகளை வீசியுள்ளன. போர்டோ அணு உலை மீது சக்தி வாய்ந்த குண்டுகளை வீசியதாகவும், இதில், அந்த அணு உலை முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தாக்குதல் குறித்து பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் பேசுகையில், ”ஈரானின் அணு சக்தி மையங்களை துல்லியமாக தாக்கினோம், ஈரான் ராணுவத்தையோ, மக்களையோ தாக்கவில்லை. அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மிகப்பெரிய வெற்றி, நாங்கள் ஈரானிய அணுசக்தி திட்டத்தை அழித்துவிட்டோம்” என்று விளக்கம் அளித்துள்ளார். இதனிடையே, போர் பதற்றத்தை தணிக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
25 நிமிடங்களில் துவம்சம் செய்த பி2 போர் விமானங்கள்:
இந்தத் தாக்குதல்கள் 7 ஸ்டெல்த் B-2 குண்டுவீச்சு விமானங்களால் நடத்தப்பட்டன, இந்த குண்டுவீச்சு விமானங்கள் 30,000 பவுண்டுகள் (சுமார் 13,608 கிலோ) எடையுள்ள பதுங்கு குழி வெடிக்கும் குண்டுகளை ஈரானின் ஃபோர்டோ மற்றும் நடான்ஸ் அணுசக்தி தளங்கள் மீது வீசியுள்ளது.
இந்த மிகவும் ரகசியமான இராணுவப் பணியில் 125 க்கும் மேற்பட்ட விமானங்கள் ஈடுபட்டன. இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:10 மணிக்கு அமெரிக்க தாக்குதல் தொடங்கியது. இந்த B-2 குண்டுவீச்சு விமானங்கள் முதலில் ஃபோர்டோ அணுசக்தி தளத்தில் இரண்டு பெரிய பதுங்கு குழி வெடிக்கும் குண்டுகளை வீசின.
இதற்குப் பிறகு, மற்ற B-2 குண்டுவீச்சு விமானங்கள் மூலம், நடான்ஸ் மற்றும் எஸ்பஹானைத் தாக்கியது. தாக்கல் நடந்து முடிந்த பின், அதிகாலை 4:35 மணிக்கு அனைத்து அமெரிக்க விமானங்களும் ஈரானிய வான்வெளியை விட்டு வெளியேறின. மத்திய கிழக்கு மோதலில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா இத்தகைய வெடிமருந்துகளைப் பயன்படுத்திய முதல் நிகழ்வு இதுவாகும்.