“பயங்கரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் இந்தியாவுக்கு உதவும்!” அமெரிக்கா நம்பிக்கை!
பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பிடிக்க இந்தியாவுக்கு பாகிஸ்தான் உதவும் என அமரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றமானது அதிகரித்து உள்ளது. இந்த தாக்குதல் நடத்திய பயங்கரவாத கும்பலுக்கு ஆதரவாக பாகிஸ்தான் உள்ளது என்ற குற்றசாட்டை இந்தியா முன்வைத்து வருகிறது.
இரு நாடுகளும் தங்கள் வான்வழியை பயன்படுத்த எதிரெதிர் நாடுகளுக்கு தடை விதித்துள்ளன. அதேபோல தூதரக உறவுகள், வணிகள் உறவுகள், விசா ஆகியவை இரு தரப்பில் இருந்தும் முற்றிலுமாக தடை செய்ப்பட்டுள்ளது. மேலும் எல்லைகளில் இரு நாட்டு ராணுவமும் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு ராணுவ நடவடிக்கைகளை வெகு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இரு நாடுகளுக்கு இடையே போர் சூழும் அபாயம் எழுந்துள்ள நிலையில், இந்த போர் சூழலை தவிர்க்குமாறு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு சுமூக உறவை பேண அமெரிக்கா கூறி வருகிறது.
இது தொடர்பாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறுகையில், பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் இந்தியாவுக்கு உதவும் என தெரிவித்தார்.
அமெரிக்காவில் ஃபாக்ஸ் நியூஸ் செய்தி தளத்திற்கு ஜே.டி.வான்ஸ் அளித்த பேட்டியில், பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு எதிராக பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா எடுக்கும் நடவடிக்கைகள் இந்தியா – பாகிஸ்தான் உறவுகளை பாதிக்காத வகையில் அமைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிப்படையாக சொன்னால், பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளை பிடிக்க உதவும், அந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் அரசு இந்தியாவுக்கு உதவும் என நாங்கள் நம்புகிறோம் என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்தார்.