சென்னை ஆர்.ஏ.புரம் பசுமைவழிசாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
அதே வேளையில்,அதிமுக தலைமை அலுவலகப் பகுதியில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் மோதலில் ஈடுபட்டதனால் பெருபதற்றம் நிலவிய நிலையில்,தலைமை அலுவலகம் பூட்டை உடைத்துக் கொண்டு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்திற்குள் சென்றனர்.
அதன்பின்னர்,அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே இருந்த ஆவணங்களை கைப்பற்றி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவர் வந்த பிரச்சார வாகனத்தில் ஏற்றினர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும்,அதிமுக தலைமை அலுவலகம் பகுதியை சுற்றிலும் சட்டவிரோதமாக கூடக் கூடாது என145தடைஉத்தரவு கோட்டாட்சியாரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை ஆர்.ஏ.புரம் பசுமைவழிசாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓபிஎஸ் இல்லத்தில் 15 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில், தற்போது 30 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.