மதுரையில் பேக்கரி தாக்கப்பட்ட விவகாரம் – திமுக பிரமுகர் பிரகாசம் கட்சியிலிருந்து சஸ்பெண்ட்!

DMK Deputy Student Election Secretary smashes AIADMK leader's bakery in Madurai Vadippatti. Prakasam, who was the DMK secretary in Porur, was expelled from the party over the bakery issue.

மதுரை வாடிப்பட்டியில் அதிமுக பிரமுகரின் பேக்கரியை அடித்து நொறுக்கிய திமுக துணை மாணவரணி செயலாளர்.

பேக்கரி விவகாரம் தொடர்பாக போரூர் திமுக செயலாளராக இருந்த பிரகாசம் கட்சியிலிருந்து நீக்கம்.

மதுரை வாடிப்பட்டியில் உள்ள அதிமுக பிரமுகருக்கு சொந்தமான பேக்கரி ஒன்று ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில் கையில் ஆயுதங்களுடன் அந்த பேக்கரி வாசலில் நுழைந்து திமுக மாணவரணி துணை செயலாளர் அசோக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பேக்கரியில் போடப்பட்டிருந்த கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன் பேக்கரியில் இருந்த மேஜை, நாற்காலிகளை தூக்கி வீசி சேதப்படுத்தியுள்ளனர். மேலும் அந்த பேக்கரியின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இது தொடர்பாக வாடிப்பட்டி காவல்துறையினர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றச்செயலில் ஈடுபட்ட அசோக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் நெல் கொள்முதல் நிலையத்தில் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் இந்த முன்விரோதம் காரணமாக தான் திமுக கட்சியை சேர்ந்த அசோகே அதிமுக கட்சியை சேர்ந்தவருக்கு சொந்தமான கடையை அடித்து நொறுக்கியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து பேக்கரி மீது தாக்குதல் நடத்திய அசோக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த பேக்கரி அடித்து நொறுக்கப்பட்ட விவகாரத்தில் மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி போரூர் செயலாளர் பிரகாசம் அவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்த நிலையில், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் பிரகாசம் நீக்கப்பட்டுள்ளார் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.