நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் – பாக்.பிரதமர் இம்ரான் கான் அதிரடி!

பாகிஸ்தான்:நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என பாக்.ஜனாதிபதிக்கு பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தான்:நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என பாக்.ஜனாதிபதிக்கு பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் இம்ரான் கான் அரசின் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த,பாகிஸ்தான் தேசிய சட்டசபையின் நடவடிக்கைகள் இன்று நடைபெற்ற நிலையில்,பிரதமர் இம்ரான் கான் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை.

துணை சபாநாயகர் அறிவிப்பு:

இதனால்,பாகிஸ்தானில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறாது என நாடாளுமன்ற துணை சபாநாயகர் காசிம்கான் சற்று முன்னர் அறிவித்திருந்தார்.

தீர்மானம் நிராகரிப்பு:

இதனைத் தொடர்ந்து,பாகிஸ்தானில் இம்ரான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிப்பதாக துணை சபாநாயகர் காசிம்கான் அறிவித்துள்ளார்.குறிப்பாக நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி அதனை துணை சபாநாயகர் நிராகரித்துள்ளார்.மேலும்,ஏப்ரல் 25 ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தையும் துணை சபாநாயகர் காசிம்கான் ஒத்தி வைத்துள்ளார்.

நாடாளுமன்ற சட்டசபையை கலைத்து விட்டு தேர்தல்:

இந்நிலையில்,நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என பாக்.ஜனாதிபதிக்கு பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக நாட்டு மக்களிடம் உரையாடிய இம்ரான் கான் கூறியதாவது:

வெளிநாட்டு சதி:

“சபாநாயகரின் முடிவுக்கு ஆதரவாக இருந்த ஒவ்வொரு பாகிஸ்தானியருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது எமக்கு எதிரான வெளிநாட்டு சதி. யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை பாகிஸ்தான் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

இடைக்கால அரசு:

அதனடிப்படையில்,நாடாளுமன்ற சபையை கலைக்கவும், இத்தேர்தல் நடைபெறும் வரை இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளேன்.ஜனநாயக முறைப்படி இத்தேர்தல் நடக்க வேண்டும்.தேர்தலுக்கு தயாராகுமாறு மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.”,என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே,நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

unknown node