அதுவே ஒழுங்கா கொடுக்க முடியல, இதுல ஒருத்தர் ரூ.1000, இன்னொருத்தர் ரூ.1,500 – டிடிவி தினகரன் விமர்சனம்

"We have started a real Dharmayutta," AIADMK general secretary DTV Dhinakaran said.

உண்மையான தர்மயுத்ததை நாங்கள் தொடங்கியிருக்கிறோம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று முதல்வர், துணை முதல்வர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது முதல்வர் பழனிச்சாமி, மகளிர் தினத்தை முன்னிட்டு குடும்ப தலைவிக்கு மாதம் தோறும் ரூ.1,500 வழங்கப்படும் என்றும் குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இலவச சிலிண்டர் எப்படி கொடுக்க முடியும் எப்படி கொடுப்பார் முதல்வர்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். கடன் சுமையில் தள்ளாடும் தமிழகம் மக்களை ஏமாற்றி வெற்றி பெற வேண்டும் என்பது இவர்களின் நோக்கம். கேஸ் விலையை குறைக்க முடியாதபோது, இதனை எப்படி கொடுக்க முடியும். இதெல்லாம் உண்மை இல்லை என்று கூறியுள்ளார்.

இந்த அறிவிப்புகள் மக்களை ஏமாற்றும் செயல், இவர்கள் அறிவிக்கும் திட்டங்களை நிறைவேற்ற வாய்ப்பே இல்லை என தெரிவித்துள்ளார். இலவசம் என்ற பெயரில் மக்களை ஏமாற்ற விரும்பவில்லை, எங்களால் முடிந்ததைத்தான் செய்வோம். அரசியலில் ஒதுங்கியிருப்போர் குறித்து விமர்சிப்பது சரியானதல்ல, உத்தம வில்லனாக கமல்ஹாசன் செயல்படுகிறார் என விமர்ச்சித்துள்ளார்.

இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளேன். இன்னும் இரண்டு தினங்களில் வெளியிடப்படும். உண்மையான தர்மயுத்ததை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். முதியோர் உதவித்தொகையை ஒழுங்காக கொடுக்க முடியவில்லை, இதில் குடும்ப தலைவிக்கு, ஒருத்தர் ரூ.1000, இன்னொருவர் ரூ.1,500 என வழங்கப்படும் என கூறுவது, மக்களை ஏமாற்றுவதற்காக செய்யக்கூடிய செயல், மக்கள் நிச்சியம் ஏமாறமாட்டார்கள் என கூறியுள்ளார்.

இதனிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருச்சியில் விடியலுக்கான முழக்கம் எனும் பெயரில் நடைபெற்ற திமுக மாநாட்டில், முக ஸ்டாலின், ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.