அதிமுக உட்கட்சித் தேர்தல்:உயர்நீதிமன்றம் இன்று விசாரணை..!

The case filed against the AIADMK election will be heard by the Chennai High Court today.

சென்னை:அதிமுக உட்கட்சித் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை,சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தலுக்கு தடை விதிக்க கோரி அதிமுக உறுப்பினர் ஜெயச்சந்திரன் தரப்பில் நேற்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதில்,ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிட இரண்டு பேருக்கு மட்டுமே வேட்பு மனு வழங்கப்பட்டுள்ளதாகவும்,நாளை(அதாவது இன்று 7.12.21) தேர்தல் என அறிவித்துவிட்டு இன்று (6.12.21) மாலையே முடிவுகளை அறிவிக்க உள்ளதாகவும் உறுப்பினர் ஜெயச்சந்திரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால்,மனுவே தாக்கல் செய்யாமல் வழக்கை எப்படி விசாரிப்பது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினர்.இதற்கு பதில் அளித்த ஜெயச்சந்திரன்,தான் மனுதாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து,இதனை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்து நாளை விசாரிப்பதாக நீதிபதி அறிவித்தனர். மேலும், குற்றச்சாட்டுகளை கூடுதல் மனுவாக தாக்கல் செய்ய மனுதாரர் ஜெயச்சந்திரனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில்,இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

இதற்கிடையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் டிசம்பர் 7 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும், 8 ஆம் தேதியன்று அதன் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அதிமுக தலைமைக் கழகத்தால் முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,இப்பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் மற்றும் அதன் மீதான பரிசீலனை முடிவுற்றது.

இதனைத் தொடர்ந்து,அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளராக ஈ.பி.எஸ். போட்டியின்றி தேர்வானதாக நேற்று அறிவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.