இந்தியா-வங்கதேசம் இடையேயான 2-வது டெஸ்டில் இந்தியா, 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 45/4 ரன்கள் குவிப்பு.
இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கும், இந்தியா 314 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது.
87 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணியில் லிட்டன் தாஸ்(73), சாகிர் ஹசன்(51) ஆகியோர் உதவியுடன் 231 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் அக்சர் பட்டேல் 3 விக்கெட்களும், அஸ்வின் மற்றும் சிராஜ் தலா இரண்டு விக்கெட்களும் வீழ்த்தினர்.
145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறி வருகின்றனர். மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் குவித்துள்ளது.
சுப்மன் கில்(7), ராகுல்(2), புஜாரா(6) மற்றும் கோலி(1) ரன்கள் என ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழக்க அக்சர் பட்டேல் (26*) ரன்கள் மற்றும் உனட்கட்(3*) ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர். இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் இந்தியா வெற்றிபெற 100 ரன்கள் தேவைப்படுகிறது. வங்கதேச அணியைப் பொறுத்தவரை மெஹதி ஹசன் 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.