சவுதி :ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில், அதற்கான தேதிகளும், அது நடைபெறும் இடத்தையும் பிசிசிஐ விரைவில் வெளியிடுவதாக அறிவித்திருந்தது.
அதன்படி, ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடைபெறும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதனால், இந்த மெகா ஏலத்திற்கான வேலைகள் தற்போது மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா-இந்தியா டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 22ம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்த டெஸ்டின் 3-வது மற்றும் 4-வது நாட்களில் மெகா ஏலம் நடைபெறுகிறது. முன்னதாக இந்த டெஸ்ட் போட்டிகள் நடக்கவிருக்கும் நாட்களில் மெகா ஏலம் நடைபெறாது எனும் ஒரு தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடைபெற போகும் இந்த மெகா ஏலத்தில், மொத்தம் 1,574 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். அதில் 1165 பேர் இந்திய வீரர்கள் மற்றும் 409 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள். மேலும், இதில் ரிஷப் பண்ட், ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் கலந்து கொள்வதால் மெகா ஏலத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு என்பது உருவாகி இருக்கிறது.
இந்தியாவுக்கு வெளியே நடைபெறும் 2-வது ஐபிஎல் ஏலம் இதுவாகும். இதற்கு முன்னதாக கடந்த 2024 ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் துபாயில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node