இறுதிப்போட்டியை நோக்கி பயணம்.., நாளை குவாலிஃபயர் 2 சுற்றில் பஞ்சாப்பை வீழ்த்துமா மும்பை.!
நடப்பு ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறவுள்ள இரண்டாவது தகுதி சுற்றில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், மும்பை அணியும் மோதவுள்ளன.

அகமதாபாத் : 2025 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாம்பியன் பட்டம் வெல்ல இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே உள்ளன. குவாலிஃபையர் 1 இல் பஞ்சாப் கிங்ஸை (பிபிகேஎஸ்) வீழ்த்திய பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) ஏற்கனவே இறுதி போட்டிக்கு நேரடியாக சென்று விட்டது.
நேற்றைய தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் மும்பைக்கு எதிராக குஜராத் அணி தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியது. ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 228 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 81 ரன்களை எடுத்தார்.
அடுத்து களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 208 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 80 ரன்களை எடுத்தார். இறுதியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த தோல்வியின் மூலம் குஜராத் அணி வெளியேறியது.
இதன் மூலம் மும்பை அணி குவாலிஃபையர் 2 போட்டிக்கு தகுதி பெற்றது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) பஞ்சாப்புடன் மும்பை பலப்பரிசை நடத்த உள்ளது. இந்தப் போட்டி ஜூன் 1 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, கோப்பைக்காக இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை எதிர்கொள்ளும்.
இந்த இரு அணிகளுக்கும் இடையே இதுவரை 33 போட்டிகள் நடந்துள்ளன. மும்பை இந்தியன்ஸ் 17 முறையும், பஞ்சாப் கிங்ஸ் 16 முறையும் வென்றுள்ளன. இதில், சிறப்பு என்னவென்றால், கடந்த 5 போட்டிகளில் இரு அணிகளும் 3-2 என்ற கணக்கில் கிட்டத்தட்ட சமமாக இருந்தன.
இரு அணிகளும் முழு படலத்துடன் இருப்பதால், நாளை நடைபெறும் போட்டி மிகவும் பரபரப்பாகவும் சுவாரசியமாகவும் இருக்கும். இதனால், நாளைய போட்டியில் யார் வென்று இறுதி போட்டிக்கு நுழைய போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.