பலூன் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் சோதனை – அமெரிக்க நிறுவனம் சாதனை..!

Space Perspective has succeeded in testing a project to travel to space with a giant balloon

பிரமாண்ட பலூன் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தின் சோதனை முயற்சியில் ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் நிறுவனம் சாதித்துள்ளது.

அமெரிக்காவில் புளோரிடாவை மையமாக கொண்ட ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் என்ற நிறுவனம்,கோடியாக்கிலுள்ள பசிபிக் ஸ்பேஸ்போர்ட் வளாகத்தில் இருந்து “ஸ்பேஸ்ஷிப் நெப்டியூன்” என அழைக்கப்படும் பலூன் மூலம் விண்வெளிச் சுற்றுலா செல்லும் திட்டத்திற்கான சோதனை முயற்சியை மேற்கொண்டு,அதில் வெற்றிப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதாவது,புளோரிடாவில் இருந்து ஏவப்பட்ட ஒரு கால்பந்து மைதானத்தின் அளவுள்ள ஒரு பிரமாண்டமான ஹைட்ரஜன் பலூன் பூமிக்கு மேலே 20 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்து,6 மணி நேர பயணத்திற்குப் பின் மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் பத்திரமாக தரையிறங்கி சாதித்துள்ளது.

பூமியிலிருந்து சுமார் 1,08,409 அடி உயரத்தில் இந்தப் பலூன் பறக்கவிடப்பட்டது.பின்னர்,பலூன் பத்திரமாக தரையிறங்கியது.இந்த வெற்றிகரமான சோதனை முயற்சியின் காரணமாக,வருகின்ற 2024 ஆம் ஆண்டு முதல் இந்த பிரமாண்டமான ஹைட்ரஜன் பலூன் மூலம் பயணிகளை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்லும் நடைமுறைகள் தொடங்கும் என ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி,எட்டு பயணிகளை மட்டுமே அழைத்துச் செல்லும் வகையில் விமானக் குழுவினரால் இந்த திட்டம் நிர்வகிக்கப்படும்.இந்த பயணத்திற்கு ஒவ்வொரு பயணிகளும் 1,25,000 டாலர்கள் கட்டணமாக செலுத்த வேண்டும்.

இதுகுறித்து,அலாஸ்கா ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷனின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் லெஸ்டர் கூறியதாவது: “சில ஆண்டுகளில் அதிக உயரமுள்ள சவாரிகள்,கோடியாக் பகுதியிலிருந்து இயக்கப்படும்.

இதன்காரணமாக,உலகெங்கிலும் உள்ள மக்கள் அலாஸ்காவிற்கு வந்து வானிலிருந்து அலாஸ்காவின் அழகை பார்க்க விரும்புவார்கள். இதனால்,சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.” என்று தெரிவித்தார்.