சென்னை:லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் குலுங்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
இங்கிலாந்தின் லண்டன் ஹீத்ரோவில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூரை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் (SQ321) ஒன்று நடுவானில் அதிக மேகம் கொண்ட கூட்டத்தில் திடீரென மோதியதால் பயங்கரமாக குலுங்கியுள்ளது.
இதன் காரணமாக, விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விமானத்தில் மொத்தம் 211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்கள் இருந்தனர்.
இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் தாய்லாந்தில் அவசரமாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதாவது, சரியாக 6:10 மணிக்கு சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த அந்த விமானம், சற்று முன் மாலை 4 மணி அளவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில், “உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. மேலும், காயமடைந்த பயணிகளுக்கு மருத்துவ உதவி வழங்க தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும்” குறிப்பிட்டுள்ளது.
unknown node