“கரையை கடந்தாலும், நகராமல் ஒரே இடத்தில் இருக்கும் ஃபெஞ்சல் புயல்" – வானிலை மையம்!

பெஞ்சல் புயல் கரையை கடந்தாலும், 3 மணி நேரமாக அதிகாலை 3-6 மணி வரை நகராமல் புதுச்சேரி அருகே ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது.

Fengal Cyclone

சென்னை :வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி அருகே முழுமையாக கரையைக் கடந்தது. நேற்று (நவ.30) மாலை 5.30-க்கு கரையைக் கடக்க தொடங்கிய புயல், இரவு 11.30 மணியளவில் முழுமையாக கரையை கடந்தது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

புயல் கரையைக் கடந்தபோது பலத்த சூறைக்காற்று வீசியது. இந்நிலையில், நேற்றிரவு கரையை கடந்த ஃபெஞ்சல் புயல், தற்போது புதுச்சேரி அருகே ஆணி அடித்தது போல நிற்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, அப்புயல் கடலூருக்கு வடக்கே 30 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்மேற்கே 120 கிமீ தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து கிழக்கே 40 கி.மீ தொலைவிலும், மையம் கொண்டுள்ளது. இது இன்னும் வலுக்குறையாமல் புயலாகவே நீடிப்பதால் உற்று நோக்கப்படுவதாக வானிலை மையம் கூறியுள்ளது.

தொடர்ந்து இது மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து வட கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node