”அண்ணா குறித்து விமர்சனம்.. பாஜகவிடம் அடகுவைக்கப்பட்ட அதிமுக” – சேகர்பாபு கடும் விமர்சனம்.!
அண்ணா மற்றும் பெரியாரை விமர்சனம் செய்யும் மேடையில் அதிமுகவினர் அமர்ந்தது, அவர்களது அடிமைத் தனத்தை காட்டுகிறது என்று அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது. முருகன் மாநாட்டில் பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும் இதில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் பலவிதமான நிகழ்ச்சிகள், உரைகள், கலை நிகழ்வுகள் இதில் இடம்பெற்றன. இந்த மாநாடு ஆன்மீக நிகழ்வாக அறிவிக்கப்பட்டாலும், தமிழக அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக மேடையில், பெரியார் மற்றும் அண்ணா குறித்து விமர்சித்து வீடியோ வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், “அண்ணா மற்றும் பெரியாரை விமர்சனம் செய்யும் மேடையில் அதிமுகவினர் அமர்ந்தது, அவர்களது அடிமைத் தனத்தை காட்டுகிறது” என்று அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்கள் சந்தித்து பேசுகையில், ”அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர் என அனைவரையும் வசை பாடியுள்ளார் அண்ணாமலை. அண்ணாவை விமர்சிக்கும் மேடையில் அமர்ந்து பாஜகவிடம் அதிமுகவை அடகு வைத்துவிட்டனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் வீடியோ ஒளிபரப்பப்பட்டதால் அதிமுகவை பாஜகவுக்கு அடிமை சாசனம் எழுதி தந்துவிட்டதாக
பாஜகவில் நயினார் நாகேந்திரன் பலமுடையவரா அண்ணாமலை பலமுடையவரா? என்ற போட்டி நிலவுகிறது. இவர்கள் போட்டிக்காக நடந்த மாநாடுதான் மதுரை முருக பக்தர்கள் மாநாடு. வேல் யாத்திரை நடத்தியதற்காக பாஜகவிற்கு 4 எம்எல்ஏக்கள்தான் கிடைத்தார்கள், இந்த முறை வெறும் மாநாடுதான், பாஜகவிற்கு முதல்வர் ஸ்டாலின் பூஜ்ஜியத்தை வழங்குவார்” என்று கூறினார்.