அஜித்தின் கட் அவுட்டுக்கு பீர் அபிஷேகம்.! அமர்க்களம் செய்த ரசிகர்கள்...

அஜித்தின் 'விடாமுயர்ச்சி' திரைப்படம் இன்று (பிப்ரவரி 6) திரையரங்குகளில் பிரமாண்டமான ஆரவாரத்துடன் வெளியாகியுள்ளது.

Vidamuyarchi

சென்னை :நடிகர் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸாகியுள்ளது. இதையொட்டி காலை முதலே அஜித் படம் வெளியான திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. 2 வருடங்களுக்குப் பிறகு அஜித் படம் ரிலீஸாவதால், ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி வாணவேடிக்கைகளுடன் கொண்டாடினர். ஆனால், ரசிகர்களின் சில விசித்திரமான கொண்டாட்டங்கள் நெட்டிசன்களை அதிர்ச்சிக்குள்ளாக்கின.

மதுரை அரசரடி பகுதியில் உள்ள சோலைமலை தியேட்டர் முன்பு ‘விடாமுயற்சி’ ரிலீஸை கொண்டாடும் வகையில் சாலையில் பட்டாசு வெடிக்க முயன்ற ரசிகர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.

மதுரையில் அஜித்தின் விடா முயற்சி படம் ரிலீஸ் ஆவதையொட்டி திரையரங்கு முன்பு பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. பேனர் முன்பு ஆடிப்பாடிய ரசிகர்கள், ஆர்வமிகுதியில் பால் அபிஷேகமும் செய்தனர்.

அது மட்டுமின்றி, ரோகினி திரையரங்கம் விடாமுயற்சி படத்தை பார்க்கும் ஆர்வத்தில் பைக்கை சாலையோரங்களில் விட்டு சென்ற ரசிகர்களின் மொத்த வண்டியையும் போலீசார் கூண்டோடு லாரியில் ஏற்றினர்.

அதிலும், சென்னை அம்பத்தூர் ராக்கி திரையரங்கில் அஜித் கட் அவுட்டிற்கு ரசிகர்கள் பீரால் அபிஷேகம் செய்து அமர்க்களம் படுத்தினர். திரையரங்கிற்கு எதிரில் உள்ள டாஸ்மாக் பாரில் பீர் வாங்கி வந்து கட் அவுட்டிற்கு அபிஷேகம் செய்ததால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.