கல்விக்கும், மருத்துவத்துக்கும் அக்கறை செலுத்தி வருகிறோம் என நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் பேச்சு.
சென்னை கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் முக ஸ்டாலின், கொளத்தூரில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மறுசீரமைப்பு பணியை தொடங்கி வைத்தார். ஜமாலியாவில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட உள்ள கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். 300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மோட்டார் பொருந்திய தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் வழங்கினார்.
மேலும், கல்லூரி மாணவர்கள் 250 பேருக்கு உதவித்தொகையும் வழங்கினார். இதன்பின் இவ்விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கொளத்தூரில் இருந்து 3 முறை எம்எல்ஏவாக தேர்தெடுக்கப்பட்டுள்ளேன். எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளுங்கட்சியாக இருந்தாலும் உங்களின் ஒருவனாக இருக்கக்கூடியவன்தான் நான். கொளத்தூர் தொகுதிக்கு வரும் போது சிறப்பான முறையில் அதிக வரவேற்பு கிடைக்கிறது. இதில் எனக்கொரு திருப்தி ஏற்படுகிறது.
மக்கள், தொண்டர்கள் இல்லை என்றால், நானும் இல்லை, திமுகவும் இல்லை. உங்கள் உழைப்புக்குத்தான் விருது. திமுக தொண்டர்கள் வேர் போன்றவர்கள். கழக முன்னோடிகளுக்கு வழங்கப்படும் பொற்கிழி கைமாறுக்கானது என நினைக்க வேண்டாம். மாணவிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலேயே அனிதா பயிற்சி மையத்தை கொளத்தூரில் தொடங்கியுள்ளோம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கல்விக்கும், மருத்துவத்துக்கும் அக்கறை செலுத்தி வருகிறோம். முதலமைச்சர் ஆன பிறகு என் மீது பல்வேறு பழிகள் சுமத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.