43 முறை பாசிடிவ் என வந்தும் கொரோனாவிலிருந்து குணமடைந்த 72 வயது முதியவர்...!

The 72-year-old British man who recovered from corona after coming in 43 times positive

பிரிட்டன் நாட்டை சேர்ந்த டேவ் ஸ்மித் என்பவருக்கு,43 முறை கொரோனா பாசிடிவ் என வந்தும் 10 மாத தொடர் போராட்டத்துக்குப் பின்னர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளார்.

பிரிட்டனில் வசிக்கும் ஓய்வுபெற்ற ஓட்டுநர் பயிற்றுவிப்பாளரான 72 வயது முதியவர் டேவ் ஸ்மித் என்பவர்,கடந்த 10 மாதங்களில் 43 முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.எனினும்,10 மாத சிகிச்சைக்குப் பிறகு,44 வது முறை கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என வந்து,தற்போது அவர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளார்.

இது தொடர்பாக,ஸ்மித் செய்தியாளருக்கு அளித்திருக்கும் பேட்டியில்,”நான் உயிர் பிழைப்பேன் என நானே நம்பவில்லை.என் குடும்பத்தினரை எல்லாம் அழைத்து,அவர்களை சமாதானப்படுத்தினேன்.எல்லோரிடமும்,விடைபெற போவதாக சொல்லிவிட்டேன்”, எனக் கூறினார்.

இதனைதொடர்ந்து,அவரது மனைவி லிண்டா கூறுகையில்: “அவர் இறந்து விடுவார் என நாங்கள் பலமுறை நினைத்துள்ளோம்.இந்த ஒரு வருடம், எங்களுக்கு நரகமாக இருந்தது”,என்று கூறினார்.

மேலும்,பிரிஸ்டால் மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் மேற்கு பிரிஸ்டால் அறக்கட்டளையை சேர்ந்த தொற்று நோய் ஆலோசகரான எட் மோரான் கூறுகையில்: “அவர் உடலில்,கொரோனா வைரஸ் தொடர்ந்து இருந்துக்கொண்டேதான் இருந்தது. அது அழியவே இல்லை.இவருடைய உடலிலுள்ள மாதிரிகளை, பல்கலைக்கழக ஆய்வுக்கு அனுப்பிவைத்து, இது அழியாமல் வளர்ந்துக்கொண்டே இருக்கிறது என்பதை நிரூபிக்க முடிந்தது.

இதனால்,அமெரிக்க பயோடெக் நிறுவனமான ரெஜெனெரான் உருவாக்கிய செயற்கை ஆன்டிபாடிகளின் காக்டெய்ல் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் ஸ்மித் குணமடைந்தார்”,என்று தெரிவித்தார்.

இதன்காரணமாக,உலகிலேயே 305 நாட்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவராக டேவ் ஸ்மித் கருதப்படுகிறார்.