I.N.D.I.A கூட்டணி உண்மையிலேயே பாஜகவுக்கு சவாலானதுதான்.! மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி.!

2024 நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் பாஜக தலைமையில் அதன் ஆதரவு கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியான NDA

Union Minister Dharmendra Pradhan

2024 நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வரும் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் பாஜக தலைமையில் அதன் ஆதரவு கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியான NDA அணியும், காங்கிரஸ், திமுக , திரிணாமுல் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்துள்ள I.N.D.I.A (இந்தியா) கூட்டணியும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

தற்போதுள்ள அரசியல் கள நிலவரத்தின் படி இரு கூட்டணிகளும் மக்கள் மத்தியில் சம அளவிலான கவனத்தை பெற்று வருவதால் வரும் நாடாளுமன்ற தேர்தல் பல்வேறு அரசியல் மாற்றங்களை சந்திக்க அதிக வாய்ப்புள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தேர்தல் நிலவரம் குறித்து மத்திய அமைச்சர்  தர்மேந்திர பிரதான் அண்மையில் தனியார் செய்தி நிறுவனத்திடம் அளித்த பெட்டியில் பல்வேறு அரசியல் கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எந்தத் தேர்தலையும் சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை. இந்தியா கூட்டணிக்கு எதிரான இந்த தேர்தலையும் உண்மையான சவாலாக நான் கருதுகிறேன். சாதாரண தொழிலாளர்கள் முதல் உயர்மட்டத் தலைவர்கள் வரை அனைவரும் ஒவ்வொரு தேர்தலையும் முக்கியமாக எடுத்துக்கொள்கிறார்கள். பிரதமர் எங்களை முன்னின்று வழிநடத்துகிறார் எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.

மேலும், மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். இந்த முறை எனக்கு எனது சொந்த மாநிலமான ஒடிசாவில் போட்டியிட வாய்ப்பு தருமாறு கட்சி தலைமையிடம் கேட்டுக்கொண்டேன்.  பெண்கள் இடஒதுக்கீடு மசோதா மூலம் நாட்டின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு அரசியல் உரிமைகளை வழங்கி பிரதமர் மோடி முன்னுதாரணமாக திகழ்கிறார் எனவும் அந்த பேட்டியில் அமைச்சர் தர்மேந்திரா பிரதான் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை உரிய வாய்ப்புகள் இருந்தும் காலாவதியாக்கிவிட்டது. காங்கிரஸ் ஆட்சியில் இந்த மசோதா மீது எந்த அக்கறையையும் காட்டவில்லை.அவர்களுக்கு அப்போது எந்த தடையும் இல்லை. இருந்தும் அவர்கள் இந்த மசோதாவை அப்போதே நிறைவேற்றவில்லை எனவும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அந்த பேட்டியில் தெரிவித்தார்.