தமிழ்நாட்டில் செங்கல்.. கர்நாடகாவில் சொம்பு.! பிரச்சார களேபரங்கள்...

Congress Protest : பிரதமர் மோடி பெங்களூரு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக காங்கிரஸார் சொம்பு வைத்து போராட்டம் செய்து வருகின்றனர்.

Karnataka Congress Protest in Bengalore

Congress Protest :பிரதமர் மோடி பெங்களூரு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக காங்கிரஸார் சொம்பு வைத்து போராட்டம் செய்து வருகின்றனர்.

கடந்த 2019 தேர்தலிலும், 2024 தேர்தலிலும் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களவை தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது, மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் மதுரை எய்ம்ஸ் கட்டாமல் இருப்பதை குறிப்பிட்டு மதுரை எய்ம்ஸ் என ஒரு செங்கல் தான் பாஜக அரசு நட்டு வைத்துள்ளது என மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.

தமிழகத்தில் பாஜகவை எதிர்த்து திமுக செங்கல் வைத்து பிரச்சாரம் செய்தது போல, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினர் பாஜகவை விமர்சிக்க செம்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

கர்நாடகாவில் மக்களவை தேர்தல் நெருங்கும் வேளை என்பதால், இன்று பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்ள பெங்களூரு வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியினர் சொம்பு கொண்டு போராட்டம் நடத்த முயன்றனர். இதனை அடுத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் கூறுகையில், கர்நாடக அரசு 100 ரூபாய் வரி கொடுத்தால் மத்திய அரசு 13 ரூபாய் தான் திருப்பி தருகிறது. (தமிழகத்திற்கு 29 பைசா போல கர்நாடகாவுக்கு 13 பைசா தான்) கடந்த 6 மாதங்களாக கர்நாடகாவில் வறட்சி நிலவுகிறது. அதனை நிவர்த்தி செய்ய 17 ஆயிரத்து 400 கோடி ருபாய் கேட்டோம் அதற்கும் எங்களுக்கு மத்திய அரசு சொம்பு தான் தருகிறது எனவே சொம்பு கொண்டு போராட்டம் நடத்துகிறோம் என கூறினார்.