கொரோனாவால் உயிரிழந்ததாக அடக்கம் செய்யப்பட்ட 10 நாட்களுக்கு பின் மீண்டும் உயிருடன் வந்த பெண்!

The incident in which a 75-year-old woman who was buried dead due to corona infection has come back to life has come as a shock to Andhra Pradesh.

கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக அடக்கம் செய்யப்பட்ட 75 வயது மூதாட்டி மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டம் கிறிஸ்டியான்பேட்டை பகுதியை சேர்ந்த கட்டையா என்பவரின் மனைவி தான் கிரிஜம்மா. 75 வயதுடைய இவருக்கு கடந்த மாதம் 12ஆம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக விஜயவாடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மே 15ஆம் தேதி தனது மனைவியை பார்க்க கட்டயா மருத்துவமனைக்கு சென்ற பொழுது கிரிஜம்மாவின் படுக்கையில் அவர் இல்லை.

எனவே அவரை மருத்துவமனை முழுவதும் தேடிப் பார்த்துவிட்டு மருத்துவமனை ஊழியர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர்கள் பிரேத பரிசோதனை அறைக்கு அழைத்து சென்று உங்கள் மனைவி இங்கு இருக்கிறார்களா என்று பாருங்கள் என உயிரிழந்தவர்களின் சடலத்தை காண்பித்து கேட்டுள்ளனர். உடனே முதியவர் தனது மனைவி இதோ இருக்கிறார் என்று காண்பிக்க மருத்துவமனை நிர்வாகமும் மே 15ஆம் தேதி அவர்களுக்கு சான்றிதழ் வழங் கி,கிரிஜம்மாவின் உடலை  உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளது.

இதனையடுத்து கிரிஜம்மாவின் உடலுக்கு இறுதிச்சடங்கும் செய்து, அடக்கம் செய்துள்ளனர். அதன் பின் கிரிஜாம்மாவுக்காக அவர்கள் வீட்டில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அப்பொழுது அந்த இடத்திற்கு கிரிஜம்மா வந்துள்ளார், உடனே அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால், கிரிஜம்மா எவ்வித பதற்றமுமின்றி ஏன் என்னை அழைக்க வரவில்லை?  நான் குணமடைந்து விட்டேன் என்று கூறி மருத்துவர் என்னை அனுப்பி வைத்து விட்டார் என கூறியுள்ளார்.

பின் இது குறித்து விசாரித்ததில் தான் புரிய வந்துள்ளது கிரிஜம்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே அவரது கணவர் வேறு ஒரு உடலை தனது மனைவி என நினைத்து வாங்கி வந்து, யாரோ ஒரு பெண்மணியின் உடலுக்கு இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்துள்ளனர். கிரிஜம்மா மீண்டும் வந்ததில் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தாலும், இறுதி சடங்கு நடந்த பெண்ணின் உடல் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.