கொச்சி:நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச் சேர்ந்த ஆரத்தி மேனன், ”காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” என்று உருக்கமாக பேசியுள்ளார்.
பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 26 பேரில், பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளில் அவரது தந்தை 65 வயதான என். ராமச்சந்திரனும் ஒருவர். கொச்சியின் எடப்பள்ளியைச் சேர்ந்த ராமச்சந்திரனின் உடல் நேற்று முன் தினம் இரவு 8 மணியளவில் கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இன்று அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது.
இந்த நிலையில், நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிய ஆரத்தி மேனன், “முதலில் அது பட்டாசு வெடிக்கும் என்று நாங்கள் நினைத்தோம்… ஆனால் அடுத்த சத்தம் கேட்டதும், எனக்குத் தெரியும்… இது துப்பாக்கி சூடு என்று. எனது தாயார் ஷீலா, காரில் தங்கியிருந்தார். “நாங்கள் தப்பிக்க வேலியின் கீழ் ஊர்ந்து சென்றோம்.
மக்கள் எல்லா திசைகளிலும் சிதறி ஓடினர். நாங்கள் நகர்ந்து கொண்டிருந்தபோது, திடீரென பயங்கரவாத தாக்குதலில் கண்முன்னேயே என் தந்தையை இழந்த நான், என் இரட்டை குழந்தைகளை காப்பாற்ற நினைத்து அங்கிருந்து தப்பி ஓடிவந்தேன். அப்போது உள்ளூர்வாசியான முசாஃபிர் என்ற ஓட்டுநர்தான் எங்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றார்.
முசாஃபிரும், மற்றொரு உள்ளூர் ஓட்டுநர் சமீரும்தான் மறுநாள் அதிகாலை 3 மணிவரை என் அப்பாவின் சடலம் இருந்த பிணவறையின் வெளியேவே நின்று, அவர்களின் தங்கையை போல் என்னை பாதுகாத்து, எல்லாவற்றிலும் உறுதுணையாக இருந்தனர். காஷ்மீர் எனக்கு இரண்டு சகோதரர்களை கொடுத்துள்ளது” என்று உருக்கமாக பேசினார்.
