சென்னை: இன்று அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனை சமத்துவ நாளாக தமிழக அரசு அறிவித்து கொண்டாடி வருகிறது. இன்று தமிழக அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன. அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய் இன்று, சென்னை இசிஆர் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தனது தொண்டர்கள் அதிகம் பேர் இல்லாமல், ஒரு காரில் தவெக பொது செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட சில நபர்களுடன் திடீரென வந்த விஜய், அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி பின்னர் மாலை அணிவித்து அங்கிருந்து உடனடியாக சென்றார்.
இது தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட விஜய், ” நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை, பாலவாக்கத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
சட்ட உரிமைகள் மட்டுமில்லை, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவையும் அனைவருக்குமானவை என்பதை வலியுறுத்தி, தமது வாழ்நாளை மக்களுக்கு அர்ப்பணித்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குவோம். நம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி, சமத்துவம் என்றும் நிலைத்திட உறுதி ஏற்போம்.” என பதிவிட்டுள்ளார் .
unknown node