தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! அண்ணாமலை பரபரப்பு பேட்டி!

தமிழக அரசு சிஏஜி அமைப்புக்கு உரிய ஆவணங்களை கொடுக்கவில்லை அதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க போகிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

BJP State President Annamalai

சென்னை :தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த சிஏஜி அறிக்கையை நேற்று சென்னையில் மத்திய முதன்மை கணக்காய்வு தலைவர் ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது, மாநிலத்தின் ஜிடிபி மொத்தமாக 14 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், இது நாட்டின் மொத்த ஜிடிபியை விட 54% அதிகம் என்று குறிப்பிட்டார்.

மேலும், 2021-2022-ல் மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.46,538 கோடியாக இருந்த நிலையில், 2022-2023-ம் ஆண்டில் ரூ.36,215 கோடியாக குறைந்துள்ளதாகவும், முந்தைய ஆண்டை விட 17% வருவாய் அதிகரித்திருப்பதே இதற்கு காரணம் எனவும் கூறினார். அதேநேரம் போக்குவரத்து கழகத்தின் மொத்த கடன் ரூ.21,980 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் கூறினார். தொழில் துறை, சேவை துறைகள் தமிழகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் கூறினார்.

இப்படியான சூழலில் தமிழகத்தின் சிஏஜி அறிக்கை பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், ” நீதிமன்றம் கொடுத்த உத்தரவுப்படி சிஏஜி அமைப்புக்கு தமிழக அரசு உரிய ஆவணங்களை கொடுக்கவில்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் தமிழக அரசுக்கு எப்படி பணம் வருகிறது எப்படி பணம் செலவிடப்படுகிறது என தெரிய வேண்டும்.

ஆதலால், தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போகிறோம். தமிழக நிதித்துறை அதாள பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. எதோ சில துறைகளில் முன்னேற்றம் என்று கூறினால் மட்டும் போதாது. ஒரு இடத்தில் முன்னேற்றம் என்றால் மீதம் உள்ள 99 இடத்தில் சறுக்கல் தான். இதனை ஒவ்வொரு துறையாக வெளியிட வேண்டும். ” என அண்ணாமலை கூறினார்.

தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! அண்ணாமலை பரபரப்பு பேட்டி!