சென்னை :சென்னையில் பெய்து வரும் இடைவிடாத மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று பெய்த கனமழையால் கணேசபுரம் மற்றும் ஸ்டான்லி சுரங்கப்பாதைகள் தவிர, மற்ற அனைத்து சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேக்கம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதில் அரசு மற்றும் தன்னார்வலர்கள் முழு வீச்சில் நேற்று முதலே ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, மழையால் பாதிக்கப்பட்டோர் 70 நிவாரண முகாம்களில் 2,789 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 3,20,174 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. தற்பொழுது, சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், ” நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை – எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown node