பாமக பொறுப்பில் இருந்து பாலு நீக்கம்..! ராமதாஸ் அறிவிப்பு!
பாமக சமூக நீதி பேரவை தலைவர் பொறுப்பில் இருந்து வழக்கறிஞர் பாலுவை நிறுவனர் ராமதாஸ் நீக்கம் செய்துள்ளார்.

சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது எப்போது முடிவுக்கு வரும் என அவர்களுடைய தொண்டர்கள் ஒரு பக்கம் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு பக்கம் கட்சியின் நிறுவனர் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களை நீக்கி வேறு சிலரை அந்த பதவிகளுக்கு நியமித்து வருகிறார். எனவே, இதன் காரணமாக பிரச்சினை இப்போது முடியாது இன்னும் தொடர்ந்து கொண்டே செல்லுமோ என தொண்டர்கள் யோசிக்கிறார்கள். இந்த கேள்விகள் தான் அரசியல் வட்டாரங்களில் எழுந்திருக்கிறது.
ஏற்கனவே பலரை ராமதாஸ் நீக்கியிருந்த நிலையில் இன்று சமூக நீதி பேரவை தலைவர் பொறுப்பில் இருந்து வழக்கறிஞர் பாலு நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வழக்கறிஞர் கோபு புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்த மாற்றம் கட்சியின் உட்கட்சி அரசியல் மற்றும் நிர்வாக மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
அதைப்போல, பாமக நிறுவனர் ராமதாஸ் புதிய நிர்வாகிகளை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை மேற்கு மாவட்டத் தலைவராக சுமன், கடலூர் கிழக்கு மற்றும் வடக்கு மாவட்டத் தலைவராக முருகானந்தம், மேற்கு மாநகரச் செயலாளராக சிலம்பரசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதே சமயம், கரூர் மாவட்ட பாமக செயலாளராக இருந்த பி.எம்.கே. பாஸ்கரன், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். மேலும், கட்சியினர் யாரும் பாஸ்கரனுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என அன்புமணி எச்சரித்துள்ளார்.