#BREAKING: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

AIADMK MLAs, including the Leader of the Opposition, have walked out of the Tamil Nadu Legislative Assembly over the NEET issue.

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையின் இறுதி நாளான இன்று நீட் தேர்வு விலக்கு மசோதா தாக்கலாக உள்ளது. இதன் மீதான விவாதத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. திமுக, அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றதை தொடர்ந்து, பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

அதாவது, ஜெயலலிதா இருக்கும் போது கூட நீட் தேர்வு வரவில்லை என்றும் எதிர்கட்சி தலைவர் முதல்வராக இருந்த போது தான் நீட் தேர்வு நடந்தது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு மத்திய அரசிடம் ஆதரவு கேட்ட போது, நீட் தேர்வுக்கு அதிமுக விலக்கு கேட்கவில்லை எனவும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

எனவே, நீட் தொடர்பாக பேரவையில் மசோதா கொண்டு வருகிறோம், எதிர்க்கட்சியும் இணைந்து நிறைவேற்றித்தர வேண்டும் முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்தது என்று குற்றசாட்டை முன்வைத்தார்.

நீட் தேர்வு பயத்தால் சேலத்தை சேர்ந்த தனுஷ் தற்கொலை செய்துக்கொண்டதற்கு திமுக அரசுதான் காரணம் என்றும் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிவிட்டார்கள் எனவும் எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டினார். இதனைத்தொடர்ந்து இருவருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்ற நிலையில், அதிமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனிடையே, கஞ்சா விற்பனை குறித்து காவல் துறையில் புகாரளித்த வாணியம்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்தார். மேலும், நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட தனுஷ் மறைவுக்காகவும், வாணியம்பாடி விவகாரம் தொடர்பாகவும், இன்று சட்டப்பேரவையில் கருப்பு பேஜ் அணிந்து அதிமுகவினர் வந்திருந்தனர் என்பது குறிப்பித்தக்கது.