முதல்வர் வருகை: ‘மதுரையில் கால்வாய் துணியால் மறைப்பு’ – ஆட்சியர் விளக்கம்.!
மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின் ரோட் ஷோ நடைபெற உள்ள நிலையில் சாலையோரம் உள்ள கால்வாயை திரைக்கட்டி மறைத்த திமுகவினர்.

மதுரை : நாளை (ஜூன் 1) மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த நிலையில், இன்று மதுரை வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை நடைபெறும் பிரம்மாண்ட ரோடு ஷோவில் பங்கேற்கிறார். மதுரை பெருங்குடி முதல் ஆரப்பாளையம் வரை சுமார் 17 கி.மீ. தொலைவுக்கு ரோடு ஷோ நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பந்தல்குடி சாலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தரும் நிலையில், சாலையில் உள்ள சாக்கடை கழிவுகள் கலக்கும் பகுதி துணியால் மூடப்பட்டுள்ளது. தூர்வாரப்படாத நிலையில் சுமார் 2 கி.மீ தூரத்திற்கு தூர்வாரப்படாத சாக்கடை கால்வாயை அதிகாரிகள் துணியால் மூடியுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.
அதாவது, முதல்வர் ஸ்டாலினின் ரோடு ஷோ நடக்கும் வழியில், அவரது கண்ணில் படாமல் இருக்க நடவடிக்கை என மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இந்த நிலையில், கால்வாயை துணியால் மறைத்தது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். கால்வாய் மறைக்கப்பட்ட விவகாரம் தற்போதுதான் எனக்கு தெரிய வந்துள்ளது என்று மதுரை ஆட்சியர் சங்கீதா விளக்கம் அளித்துள்ளார்.