அவதூறு வழக்கு: வருண்குமார் பற்றி அவதூறாக பேச சீமானுக்கு இடைக்காலத் தடை.!

டிஐஜி வருண்குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க சீமானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Varunkumar - Seeman

சென்னை :டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் (நாதக) ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பொதுவெளியில் ஆதாரம் இல்லாமல் அவதூறு கருத்துக்களை தெரிவிப்பதாக கூறி ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் வழக்கு தொடர்ந்தார். இதில், ரூ.2.10 கோடி மான நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் டிஐஜி வருண்குமார் தனது மனுவில் கோரிக்கை வைத்ததற்கு பதில் அளிக்க சீமானுக்கு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை கிளையின் நீதிபதி எல். விக்டோரியா கௌரி, திருச்சி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து, விசாரணையை ஆகஸ்ட் 4ம் தேதி வரை ஒத்திவைத்தார். மேலும், இந்த வழக்கு கடந்த 2021ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் நாதக உறுப்பினர் ‘சட்டை’ துரைமுருகனை வருண் குமார் கைது செய்ததை அடுத்து தொடங்கியது.

இதன் காரணாமாக, டிஐஜி வருண் குமார், சீமான் மற்றும் அவரது கட்சியினர் சமூக ஊடகங்களில் தனது குடும்பத்தை இழிவுபடுத்தியதாகவும், அவதூறு கருத்துகளை பரப்பியதாகவும் குற்றம்சாட்டி, ரூ.2 கோடி இழப்பீடு கோரி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

சீமான் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, இது அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கு என்றும், திமுக அரசின் செல்வாக்கின் கீழ் வருண் குமார் தனது கட்சியை குறிவைப்பதாகவும் கூறியுள்ளார். இந்த வழக்கு தொடர்ந்து சட்டரீதியாக விசாரிக்கப்பட்டு வருகிறது.