நீர்நிலைகளை கண்காணிக்க ஆளில்லா விமானம் – அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு!

Minister Duraimurugan has announced that drones will be procured to monitor water levels in Tamil Nadu.

தமிழகத்தில் நீர்நிலைகளை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் கொள்முதல் செய்யப்படும் என அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு.

தமிழக சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன்விழா காணும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. பேரவையில் பொன்விழா காணும் அமைச்சர் துரைமுருகனுக்கு, ஓபிஎஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மாற்று எதிர்க்கட்சி தலைவர்கள் பாராட்டும், வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழகத்தில் நீர்நிலைகளை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். நிதிநிலை அறிக்கையில் ஏற்கனவே தெரிவித்தவாறு ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை, விழுப்புரம், தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் 8 புதிய கால்வாய்கள் அமைக்கப்படும் என்றும் பிரதமரின் நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் 23 மாவட்டத்தில் 200 குளங்கள் சீரமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும்,  நெல்லை, குமாரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, சென்னையில் 16 தூண்டில் வலை, கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்கப்படும் என்றும் கூறினார்.

இதற்கு முன் மாநிலம் முழுவதும் ஆறுகள், ஓடைகளின் குறுக்கே சாத்தியமுள்ள இடங்களில் தொடர் தடுப்பணைகள் அமைக்க திட்டம் உள்ளதாகவும் முதல் கட்டமாக காவிரி, கொள்ளிடம், தாமிரபரணி ஆறுகளின் குறுக்கே கதவணைகள் அமைக்க உத்தேசம் என நீர்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் கூறப்பட்டது.

மேலும், மேகதாது அணையை கர்நாடகா கட்ட முயற்சிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்தும் என்றும் காவிரில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கொள்கை குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.