கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு : அனுமதியின்றி முகாம் நடத்தியது ஏன்.? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.! 

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras High Court

சென்னை :கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் செயல்படும் தனியார் பள்ளி ஒன்றில், இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற போலி என்சிசி முகாமில் 12 வயது பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார். இந்த புகாரில் முக்கிய குற்றவாளியான போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன், தவறை மறைக்க முயற்சித்த பள்ளி தாளாளர், பள்ளி தலைமை ஆசிரியர் என மொத்தம் 9 பேர் காவல்துறையால் கைதாகினர்.

இதில் முக்கிய குற்றவாளி சிவராமன் கைது செய்வதற்கு முன்னர் விஷம் அருந்தி இருந்ததால் சேலம் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சிவராமன் உயிரிழந்தார். விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் போதே முக்கிய குற்றவாளி உயிரிழந்த விவகாரம் பலரது மத்தியில் சந்தேகத்தை எழுப்பியது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி பாலியல் வழக்கை சிபிஐ விசாரித்து உண்மைகளை கண்டறிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓர் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு  கொண்டுவரப்பட்டது.

அதில், மனுதாரர் தரப்பில் வாதிடுகையில், ” தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் மாணவியின் பெயரைத் தவிர்த்து மற்ற அனைத்து விவரங்களையும் கூறி மாணவியின் அடையாளத்தை வெளிப்படுத்தி விட்டனர். விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு கூட ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிய தமிழ்நாடு அரசு, பாதிக்கப்பட்ட மாணவிக்கு எந்தவித நிவாரணமும் வழங்க வில்லை” என வாதிட்டனர்.

இதனை அடுத்து, தமிழக அரசு கூறிய விளக்கத்தில், பள்ளி மாணவி பாலியல் வழக்கில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு இதுவரை முக்கிய குற்றவாளி உட்பட பள்ளி தாளாளர், பள்ளி முதலமைச்சர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், பள்ளிக்கல்வித்துறை அனுமதியின்றி எப்படி தனியார் பள்ளியில் என்சிசி முகாம் நடத்த முடியும்? சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி மீது அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இதுவரையில் கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.