மன்னிப்பு கேட்க நாங்கள் சாவர்க்கார் பரம்பரை அல்ல.! அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி.!

தமிழக அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆவின் நிறுவனத்தின் பாலில் கொழுப்பு அளவு குறைக்கப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில தினங்களுக்கு முன்னர் குற்றம்

BJP State President Annamalai - Tamilnadu Minister Mano Thangaraj

தமிழக அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆவின் நிறுவனத்தின் பாலில் கொழுப்பு அளவு குறைக்கப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில தினங்களுக்கு முன்னர் குற்றம் சாட்டினார். மேலும், இதுகுறித்த ஆய்வறிக்கை என்றும் ஒரு பதிவை ததனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து ஆவின் பால் தரம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இது குறித்து பதில்  அளித்து இருந்தார். ஆவின் பால் பாக்கெட்டில் இருந்து இந்த ஆய்வறிக்கை வெளியிடப்படவில்லை. ஆவின் பாலை குறை கூறிவிட்டு, வடமாநில பால் நிறுவனத்தை  தமிழகத்திற்கு கொண்டு வர முயற்சிக்கிறார்கள். இதற்காக கையூட்டு (லஞ்சம்) பெற்றுள்ளார்கள் எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம்சாட்டி இருந்தார்.

மடியில் கனம் இருப்பவர்கள் பயப்படத்தான் வேண்டும்…பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்!

அமைச்சரின் இந்த பதிலை அடுத்துபாஜக மாநில தலைவர் அண்ணாமலைதனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக நான் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தீர்கள்.

உங்களுக்கு 48 மணிநேரம் அவகாசம் தருகிறேன். திமுக அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறை மூலமாக விசாரித்து, நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களைப் பொதுவெளியில் வெளியிடவேண்டும். உங்களால் நிரூபிக்க முடியவில்லையெனில், தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பதிவிட்டு இருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில்அமைச்சர் மனோ தங்கராஜ், ”ரபேல் வாட்ச் கட்டி ஆடுமேய்ப்பவரின் கதையை தான் கூறினேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து, நான் தான் அந்த அண்ணாமலைஎன்று கூறுவது ஏனோ? குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்.

மன்னிப்பு கேட்காவிட்டால் என்ன, தலையை சீவி விடுவாயா? 48 மணி நேரம் என்பது மிரட்டலா? நான் கூறிய கருத்தில் இருந்து எள்ளளவும் மாற்றம் இல்லை. ஏனெனில் அது ஆதாரத்துடன் உள்ளது. இது தமிழ்நாட்டு மக்கள் மற்றும் , பால் உற்பத்தியளர்களின் நலன் சார்ந்தது.

மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கார் பரம்பரை அல்ல. பெரியாரின் பேரன்கள். கலைஞரின் உடன்பிறப்புகள். தளபதியின் தம்பிகள். தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பவர்கள். ” என தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் , பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பதில் கூறும் விதமாக பதிவிட்டு வருகிறார்.