சென்னை :மத்திய அரசு “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை செயல்படுத்த தற்போது தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல், அடுத்த சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு பரிந்துரை செய்ததற்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறை என்பது மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் செயல் என திமுக உட்பட பல்வேறு கட்சியினர் இத்திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்பது இந்தியாவில் உள்ள பல்வேறு தேர்தல் நடைமுறையை புறக்கணித்து, கூட்டாட்சித் தன்மையைக் சீர்குலைக்கும் செயலாகும். இது ஒரு நடைமுறைச் சாத்தியமற்ற திட்டம். மத்திய , மாநில, உள்ளாட்சி தேர்தல்கள், மாநில மற்றும் உள்ளூர் பிரச்சினைகள் மற்றும் நிர்வாக முன்னுரிமைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்த்தால் இது அடிப்படையிலேயே சாத்தியமற்றதாகும்.
இது தற்போது நடைபெறும் ஆட்சியின் இயல்பான போக்கை சீர்குலைத்து, அனைத்து அலுவலக விதிமுறைகளிலும் பல்வேறு தேவையில்லாத சீரமைப்பு தேவைப்படும். இந்த முழு திட்டமும் பாஜகவின் ஈகோவை திருப்திபடுத்தும் நடவடிக்கைதான்.
ஆனால், அவர்களால் அதை ஒருபோதும் செயல்படுத்த முடியாது. இந்தியாவின் ஜனநாயகத்தை ஒரு கட்சியின் பேராசைக்கு ஏற்ப வளைக்க முடியாது. இந்த திசைதிருப்பல் தந்திரங்களில் ஆளும் அரசு தங்கள் சக்தியை வீணாக்காமல், நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு மற்றும் மாநிலங்களுக்கு வளங்களை சமமாக விநியோகித்தல் போன்ற அழுத்தமான பிரச்சினைகளை மத்திய அரசு தீர்க்க வேண்டும்.” என ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து தனது கண்டனத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
unknown node