தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு விடுமுறையாக அறிவிக்க முடியாது – தமிழக அரசு!

ஊரடங்கு காரணமாக தொழில் நிறுவனங்கள் மூடப்பட்ட காலம் முழுவதையும் சிறப்பு விடுமுறையாக அறிவிக்க முடியாது என தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக தொழில் நிறுவனங்கள் மூடப்பட்ட காலம் முழுவதையும் சிறப்பு விடுமுறையாக அறிவிக்க கோரி வழக்கறிஞர் ரவீந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு காணொலிக்காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது, தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் திருத்த சட்டத்தின்படி சிறப்பு விடுமுறை என்பது ஒரு நாள் மட்டுமே அறிவிக்க முடியும் என்றும் ஊரடங்கு காலத்தில் தொடர்ச்சியாக நிறுவனங்கள் மூடப்படும் போது, அத்தனை நாட்களையும் சிறப்பு விடுமுறையாக அறிவிக்க முடியாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழக அரசுக்கு எதிரான இந்த வழக்கில் மத்திய அரசு, தென்னிந்திய தொழிலாளர் சம்மேளனம், கோவையில் உள்ள கொடிசியா தலைவர் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக சேர்த்து, மே 28ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர். மேலும் உற்பத்தி துறையில் நாட்டில் முன்னிலை மாநிலமாக உள்ள தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் திறம்பட இயங்கினால் மட்டுமே மத்திய, மாநில அரசுகளின் வருமானம் பெருகும் என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், 2005ம் ஆண்டின் பேரிடர் மேலாண்மை சட்டத்தில் உள்ள விதிகளை ஆராய்ந்து உரிய பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இதனிடையே தமிழகத்தில் கொரோனாவால் 1,937 பேர் பாதிக்கப்பட்டு, 24 உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.