சசிகாந்த் செந்தில் போராட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு!!

காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது ஆதரவைத் தெரிவித்தார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

s_kanth - Rahul Gandhi

திருவள்ளூர் :காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில், தமிழக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை (சமக்ர சிக்க்ஷா திட்டத்தின் கீழ்) வழங்கப்படாததற்கு எதிராக நேற்றைய தினம் திருவள்ளூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

இந்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது ஆதரவைத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை ஒன்றிய அரசு தரக் கோரி 2வது நாளாக இன்று உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்திய அரசியலமைப்பிற்கு விரோதமாக நிதியை நிறுத்தி வைத்திருப்பதாகவும், இது 43 லட்சம் மாணவர்கள் மற்றும் 2.2 லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.