செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.! 

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது.

Senthil Balaji - Supreme court of India

டெல்லி :சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த 2023 ஜூனில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஓராண்டுக்கு மேலாக அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் இருக்கும் செந்தில் பாலாஜி, ஜாமீன் கேட்டு சிறப்பு நீதிமன்றம், உயர்நீதிமன்றங்களை நாடினார். அங்கு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன

இதனை அடுத்து, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பு மனு அளித்து இருந்தது. இந்த ஜாமீன் வழக்கானது, நீதிபதிகள் அபெய் எஸ்.ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிக் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணை கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் 37 நாட்கள் கழித்து, இன்று இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில் , முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

471 நாட்கள் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி இன்று ஜாமீனில் விடுதலையாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.