‘மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த பெண்களுக்கு கூடுதல் சலுகை’ – தமிழக அரசு உத்தரவு.!
மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் தமிழக அரசுப் பேருந்துகளில் பயணிக்கும்போது இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சென்னை : மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களுக்கு பேருந்துகளில் கட்டணமில்லா சுமை பயணச்சீட்டை வழங்க தமிழ்நாடு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நகரப் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகளில் 100 கி.மீ வரை, மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் 25 கிலோ வரையிலான பொருட்களை கட்டணமின்றி எடுத்துச் செல்ல போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளது.
விற்பனைப் பொருட்களின் சுமைக் கூலியை கொடுக்க முடியாமல் தவித்த மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு சிறப்புச் சலுகையாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது. குறிப்பாக, எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள், பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பெரிய சுமைகளை அனுமதிக்கக் கூடாது.
கண்காட்சிக்கான பொருட்கள், விளைபொருட்களை எடுத்துச் செல்ல உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுய உதவி குழு அடையாள அட்டை வைத்திருக்கும் மகளிருக்கு, பேருந்துகளில் பயணம் செய்ய கட்டணமில்லா சுமை பயணச்சீட்டு விரைவில் நடத்துனரால் வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.