சென்னை:அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தவெக தலைவர் விஜய், தன் கைப்பட எழுதிய கடிதத்தின் நகலை, சென்னை பூக்கடையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு வழங்கிய பெண் நிர்வாகிகளை போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட பெண் நிர்வாகிகளை சந்திக்க சென்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தையும் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், புஸ்ஸி ஆனந்த் கைதை கண்டித்து, தவெகவினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். பின்னர், கைது செய்யப்பட்ட இரண்டு மணி நேரத்திலேயே தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகளையும் போலீசார் விடுவித்தனர்.
இந்த நிலையில், தவெகவினர் கைது செய்யப்பட்டதற்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், “அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சூழலில், தமிழகத்துத் தங்கைகளுக்கு இன்று நான் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது. இக்கடிதத்தின் நகல்களைத் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடமும் பெண்களிடமும் த.வெ.க. மகளிரணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் வழங்கியுள்ளனர்.
சென்னையில் பொதுமக்களிடம் இந்த நகல்களை எம் கட்சித் தோழர்கள் வழங்கவிடாமல் தடுத்த காவல் துறையினர், அவர்களைக் கைது செய்து, பின்னர் விடுவித்துள்ளனர். ஜனநாயக வழியில் பிரசுரங்களை விநியோகம் செய்ய முயன்றதற்காக அவர்களைக் கைது செய்தது கண்டனத்துக்கு உரியது.
“கருத்துரிமை, பேச்சுரிமை அடிப்படையில், யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அறவழியில் மக்களைச் சந்தித்த எம் கட்சித் தோழர்களைக் கைது செய்வது தான் ஜனநாயகமா? இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் வெகு காலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்”என்று அழுத்தமாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
unknown node