தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி நாங்கள் தான்.! எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்.! 

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு பதில்

ADMK Chief Secretary Edappadi Palanisamy

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு பதில் கூறினார். குறிப்பாக ஆசிரியர்கள் போராட்டம், அண்ணாமலை கூறிய பாஜக vs திமுக விவகாரம், அதிமுக – பாஜக கூட்டணி முறிவு பற்றிய விவகாரம் என பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து தனது கருத்துக்களை பதிவிட்டார்.

கடந்த 8 நாட்களாக பகுதிநேர மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் போராடியது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் உள்ளவற்றை தான் அவர்கள் போராடி கேட்கிறார்கள். அதனை நிறைவேற்ற வேண்டியது அவர்கள் கடைமைஎன குறிப்பிட்டார்.

சமூக வலைதளத்தில் என்ன பதிவிட்டாலும் உடனே காவல்துறை நடவடிக்கை எடுப்பது இந்த அரசின் சர்வாதிகார போக்கை காட்டுகிறது. இதற்கு திமுக அரசு பதில் கூறவேண்டும்.  அரசே இங்கு குளறுபடியாக தான் இருக்கிறது அதனால் காவல்துறையும் குளறுபடியாக உள்ளது.

தமிழகத்தில் திமுக vs பாஜக தான் போட்டி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது பற்றி பேசுகையில், அது அவரின் கருத்து. அவரிடம் தான் கேட்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி.  30 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த கட்சி. யாருக்கு யார் எதிரி என மக்களிடம் கேளுங்கள் என கூறினார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாய உலகில் இருக்கிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் உண்மை நிலவரம் தெரியும்.  நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துவிட்டோம் . கடந்த மாதம் 25ஆம் தேதி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் கலந்து ஆலோசித்து முடிவெடுத்துவிட்டோம். அதில் மாற்றமில்லை. மக்கள் நலன் காக்க நாங்கள் (அதிமுக) தனித்து போட்டியிட உள்ளோம்.

எங்களை பொறுத்தவரை தமிழக உரிமைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். தமிழகத்திற்கு சரியான அளவில் நிதி ஒதுக்க வேண்டும். சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.  இதனை முன்னிறுத்தும் கட்சிக்கு எங்கள் ஆதரவு இருக்கும். ஒவ்வொரு கட்சியும் அவரவர் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். காவிரி விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் தண்ணீர் வேண்டும் என கூறுவார்கள். அதே போல கர்நாடக காங்கிரஸ் தண்ணீர் தர கூடாது என்பார்கள். அதே போல தான் பாஜகவும், தமிழக பாஜக ஒரு நிலைப்பாடு, கர்நாடக பாஜக ஒரு நிலைபாடு என கூறினார்

டிடிவி தினகரன் பற்றிய கேள்விக்கு, வரும் நாடாளுமன்ற தேர்தல் உடன் டிடிவி தினகரன் காணாமல் போய்விடுவார். அதிமுக கட்சி பற்றி ஓபிஎஸ் மேல்முறையீடு பற்றி கேட்கையில், அவர்களும் பல முறை நீதிமன்றம் சென்றுவிட்டனர். அதில் அனைத்து முறையும் உண்மையான தீர்ப்பு எங்கள் பக்கமே வந்துள்ளது. தற்போது அவர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர் எனவும் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.