முதல்வரை சந்தித்து பேசியது என்ன? விளக்கம் கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், அவரை தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் உடல்நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதன்பிறகு சிகிச்சை முடிந்த பின் வீடு திரும்பினார். இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் சென்று முதல்வரை சந்தித்து அவருடைய நலம் குறித்து கேட்டறிந்து வருகிறார்கள். அந்த வகையில், இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முதல்வரை நேரில் சாதித்து நலம் விசாரித்தார்.
நலம் விசாரித்ததற்கான புகைப்படங்களும் உடனடியாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் தொடங்கிவிட்டது. வைரலாக பரவியது மட்டுமின்றி இருவருடைய சந்திப்பு எதற்காக திடீரென நடந்தது என்கிற கேள்விகளும் ஒரு பக்கம் எழுந்தது. இதனையடுத்து சந்திப்பு நடந்து முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் இது அரசியல் ரீதியாக நடந்த சந்திப்பு இல்லை எனவும் நட்பு ரீதியாக நடந்தது என விளக்கம் அளித்தார்.
இது குறித்து பேசிய அவர் ” அவருடைய உடல் நலம் எப்படி இருக்கிறது என்பதை விசாரிக்க நான் அவரை சந்திக்கே வந்தேன். அவருடைய உடல்நலம் எப்படி இருக்கிறது என்பதை கேட்டு தெரிந்துகொண்டேன். உடனே அவர் என்னுடைய உடல் நலம் இப்போது சரியாக இருக்கிறது. இன்றிலிருந்து நான் மீண்டும் அரசு பணிகளை தொடரப்போகிறேன் என்று கூறினார். கேப்டன் மருத்துவனையில் இருந்தபோது அடிக்கடி தொடர்பு கொண்டு ஸ்டாலின் அண்ணன் பேசுவார். நிறையவே அறிக்கைகளும் வெளியிட்டு இருக்கிறார்.
எனவே, இப்போது மு.க.ஸ்டாலின் உடல் நலம் சரியில்லை என்கிற காரணத்தால் நட்பு ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் அவரை சந்தித்து நலம் விசாரித்தேன். மற்றபடி அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை. வரும்போது கேப்டன் சார்பாகவும், தேமுதிக சார்பாகவும் குணமடைய வேண்டும் என வாழ்த்துக்கள் தெரிவித்துவிட்டு வந்தோம்” எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, திமுக கூட்டணியில் தேமுதிக இணையுமா என்பது போல இந்த சந்திப்பை வைத்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், 100 இது அரசியல் சந்திப்பு இல்லை..நீங்கள் அப்படி பார்க்கிறீர்கள் நாங்கள் நட்பு ரீதியாக சந்தித்தோம். கூட்டணி குறித்து அறிவிக்க இன்னும் காலம் இருக்கிறது தேவையான நேரத்தில் நாங்கள் அறிவிப்போம்” எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
நட்புடன் நலம் விசாரித்தமைக்கு நன்றி!@PremallathaDmdk https://t.co/pAxATFTdLt
— M.K.Stalin (@mkstalin) July 31, 2025