நடிகர் பின்னால் சென்று விபத்தில் சிக்கும் இளைஞர்கள் விரைவில் திருந்துவார்கள் - மு.க.ஸ்டாலின்!

தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மக்களிடையே அமோக வரவேற்பு இருக்கிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Hero Image

புதுக்கோட்டை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் நடைப்பயிற்சியின் போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.காலையில் இருந்து தொடங்கிய நடைப்பயிற்சியின்போது, முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களுடன் நெருங்கிப் பழகி, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், திமுக கூட்டணியின் வெற்றி குறித்து அதிக நம்பிக்கை தெரிவித்தார்.முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது:“மக்களின் எழுச்சியைப் பார்த்தால், 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெறும். எத்தனை பேர் வந்தாலும், என்ன செய்தாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது.” எனவும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை குறிப்பிட்டு முதலமைச்சர் கடுமையாக விமர்சித்தார். அவர் மேலும் கூறியதாவது:“அதிமுக, பாஜகவுக்கு அடிமையாகிவிட்டதால் டெல்லிதான் ஆதிக்கம் செலுத்துகிறது. ஒரு திராவிட கட்சி இப்படியான நிலைக்கு வந்திருப்பதை நினைத்து வேதனைப்படுகிறோம், வெட்கப்படுகிறோம்.” எனவும் பேசினார்.

மேலும், அதனைத்தொடர்ந்து, நடிகர் பின்னால் சென்று விபத்தில் சிக்கும் இளைஞர்கள் விரைவில் திருந்துவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். தேர்தல் நெருங்கும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இன்றைய புதுக்கோட்டை பிரச்சாரம் திமுகவுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் உற்சாகமான வரவேற்பு மற்றும் ஆதரவு, திமுக கூட்டணியின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.